Type Here to Get Search Results !

Early bus tour of Sri Lanka இலங்கையின் ஆரம்ப கால பேருந்துப் பயணம்

இலங்கையின் ஆரம்ப கால பேருந்துப் பயணம்



நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் வாழ்க்கையில் நாளுக்கு நாள் நம்மை நிரப்பிக்கொண்டிருக்கும் கண்டுபிடிப்புகளும் தொழிநுட்பங்களும் ஏராளம். இந்த இயந்திர வாழ்க்கையைக் கைவிட்டுவிட்டு  தொழிநுட்பங்கள் எட்டிக்கூட பார்க்காத நம் குழந்தை பருவத்திற்கு செல்ல தயாரா என யாராவது கேட்டால், யோசிக்காமல் அனைவரும் தலையாட்டுவோம். குறிப்பாக 80 களிலும் 90 களிலும் பிறந்தவர்கள் கண்சிமிட்டும் நொடியில் தலையாட்டி புன்னகைப்பார்கள். ஏனென்றால் அது, தற்போதுள்ள நவீன சந்ததியினருக்கு கொடுத்து வைக்காத பொற்காலம் என்றே சொல்லலாம்.  

அந்தவகையில் இலங்கையில் ஆரம்ப காலங்களிலிருந்து இலங்கையில் வாழ்ந்துகொண்டிருபவர்களுக்கு தங்கள் பருவங்களில் கொண்டாடித்தீர்த்த நினைவுகளெல்லாம் ஏராளம் கொட்டிக்கிடக்கும். அதில் சிறுவயதுப் பருவங்களில் பாடசாலைகள், அலுவலகங்கள், குடுப்பப் பயணங்கள் சென்ற அப்போது இலங்கையில் காணப்பட்ட பேருந்துகள் பற்றிய நினைவுகளை இந்தப்பதிவு கொஞ்சமேனும் உங்களுக்கு நியாபகப்படுத்தும். 


இலங்கையில் பஸ் போக்குவரத்துத்துறையை அரசாங்கம் பொறுப்பேற்றபோது பயணிகள் போக்குவரத்து சேவையானது இருபத்தி இரண்டாயிரம்  மைல்களுக்கு விஸ்தரிக்கப்பட்டிருந்துள்ளது. அப்போதைய பிரதமர் அமரர் S.W.R.D பண்டாரநாயக்க அவர்களால் இந்த துறையானது ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.  அப்போதைய போக்குவரத்து அமைச்சராக மைத்திரிபால சேனநாயக்க இதன் ஆரம்ப ஸ்தாபகராக காணப்பட்டார் என ஆவணப்படுத்தப்பட்ட குறிப்புகள் சொல்கின்றன. 

1958 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் பழைய பாராளுமன்ற வளாகத்தில் தான் இந்த நிகழ்வானது நடைபெற்றுள்ளது. அப்போது 76 தனியார் பஸ் நிறுவனங்களும் அவற்றிடம் இருந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர்  பயணிகள் போக்குவரத்துச் சேவை என அழைக்கப்பட்டு வந்த இத்துறையானது, இலங்கை போக்குவரத்து சேவை எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் பஸ் போக்குவரத்துத் துறையை மக்கள் மயப்படுத்தி 60 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில், தனியார் துறையொன்றை அரசாங்கம் பொறுப்பேற்ற முதலாவது சந்தர்ப்பம் அது என வரலாறுகள் குறிப்பிடுகின்றன.  

இன்று ஐரோப்பிய நாடுகளில் அதிகள் காணப்படும் இந்த  இரண்டடுக்கு பேருந்துகள் இலங்கையிலும் ஆரம்ப காலங்களில் மக்கள் சேவையில் பெருமளவு இருந்துள்ளது. இன்றளவும் ஓரிரண்டு நவீன மயப்படுத்தப்பட்ட இரண்டடுக்கு பேரூந்துகள் கொழும்பு நகரைச் சுற்றிவந்தாலும், நம் சிறு பிரயாயத்தில் இந்த பேருந்தின் மேலடுக்கில் பயணிக்க வேண்டுமென்பது லட்சிய கனவுகளாக காணப்பட்ட நினைவுகளாலும். 

இன்றும் இந்தவகை பேருந்துகள் இலங்கை  பஸ் டிப்போக்களிலும் வீதியோரங்களிலும் மிகப்பழுதடைந்த நிலையில் காணக்கூடியதாக உள்ளது.



இலங்கையில் 70 மற்றும் 80 களின் காலப்பகுதியில் Isuzu நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பேரூந்துகள் அதிகள் காணப்பட்டன. 30 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்து வகைகள் நாட்டின் எல்லா சிறு பகுதிகளிலும் அதிகம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து பாடசாலை சேவைகளுக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

1958 ஆண்டு அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்க அவரினால் ஜெர்மனியிலிருந்து benz நிறுவன பேரூந்துகள் இறக்குமதி செய்யப்பட்டன. 50 இருக்கைகள் கொண்ட இப்பேருந்துகள் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற தூரப்பயணங்களுக்கு அதிகம் இயக்கப்பட்டுள்ளன. இந்த வகைப் பேருந்துகள் தற்போது போக்குவரத்து சேவையில் இல்லாத போதும், பஸ் டிப்போக்களின் உதிரிபாகங்கள் ஏற்றிச்செல்வதற்காக சிலவற்றை பயன்படுத்துவருகின்றனர். 

பின்னர் இந்திய மோட்டார் வாகன நிறுவனமான TATA நிறுவனதினால் தயாரிக்கப்பட்ட பேருந்து வகைகள் இலங்கைக்கு இறக்குமதியாகத் தொடங்கின. இவைகள் இலங்கையின் பல பாகங்களுக்கு கொழும்பிலிருந்து இயக்கப்பட்டுள்ளன. தற்போதும் இலங்கை போக்குவரத்து துறையானது TATA நிறுவன பேருந்துகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றது.


அக்காலங்களில் பயன்பாட்டில் இருந்த இந்த Dimo பேருந்துகள், கொழும்பு மற்றும் கண்டி போன்ற நகரங்களில் அதிக பயன்பாட்டில் இருந்துள்ளது. இவ்வகை பேரூந்துகள் விசேட சேவைகளாக இயக்கப்பட்டு வந்துள்ளன. 


இத்தனை வருட பயணத்தில் எத்தனையோ மாற்றங்களைக் கண்டு நவீன தொழிநுட்பகளைக் கற்று கடந்துச் சென்றாலும் இவை போன்ற சில சின்னச் சின்ன அம்சங்கள் அழிக்க முடியாத நினைவுகளாக நம்மில் ஒட்டிக்கொண்டுள்ளன என்பதே நிதர்சனம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad